ரோஸ்மெரி சாகுபடி

Agriwiki.in- Learn Share Collaborate
வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது . மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம் . இது 5.0 க்கும் குறைந்திருந்தால் , எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம் . பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும் , கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும் . ஜூன் , ஜூலை . செப்டம்பர் , அக்டோபரில் பயிரிடலாம் . பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும் .
நிலம் தயாரித்தல் :
இருமுறை உழ வேண்டும் . கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரம் , ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு , 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 2 டன் மண்புழு உரத்தை வேண்டும் . பிறகு , 30 செ.மீ. உயரம் , 1.5 மீ . அகலத்தில் பாத்திகளை அமைக்க வேண்டும் . நடவின் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம் , 5 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும் . ஒரு எக்டர் நடவுக்கு 50,000 நாற்றுகள் தேவைப்படும் .
நாற்று உற்பத்தி:
செடிகள் பூப்பதற்கு முன் தண்டுகளை வெட்டி , 10-15 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும் . நுனி இலைகள் இருக்க , மற்ற இலைகளை நீக்க வேண்டும் . வேர்விடும் திறனைக் கூட்ட , 10 % சாண மூலிகைக் கரைசலில் 20 நிமிடம் நனைக்க வேண்டும் . பின் நெகிழிப் பைகளில் நட்டு , நிழலில் வைத்து , தினமும் இருமுறை நீரூற்றி வந்தால் , 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும் .
நடவு :
45X45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும் . ஆறு மாதம் கழித்துச் செடியின் மையத்தண்டை வெட்டி விட்டால் , பக்கக் கிளைகள் நன்கு வளரும் . இதை மானாவாரியாகப் பயிரிடலாம் . வறட்சியில் பாசனம் செய்தால் பச்சை இலைகள் அதிகமாகக் கிடைக்கும் .
பின்செய் நேர்த்தி :
நட்டு ஒரு மாதத்தில் களையெடுக்க வேண்டும் . ஆண்டுக்கு 4-5 முறை களையெடுத்தல் அவசியம் . இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லத்தை எக்டருக்கு 5 கிலோ எடுத்து , 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து வேண்டும் . மேலும் , 3% பஞ்சகவ்யக் கரைசலை ஆண்டுக்கு ஐந்து முறை பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் . மேலும் , இக்கரைசலை மண் அணைத்தல் முறையில் மாதம் ஒருமுறை இட வேண்டும் .
5% வேப்பெண்ணெய்க் கரைசல் , 10 % . மண்புழு வடிநீர்க் கரைசல் , 3% தசகவ்யக் கரைசலை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும் . இதற்குப் பூச்சி , பூசண நோய்களை எதிர்க்கும் திறன் இருப்பதால் பயிர்ப் பாதுகாப்பு அவசியமில்லை . ஆண்டுதோறும் ஒரு எக்டரில் இருந்து 12-13 டன் பச்சை இலைகள் கிடைக்கும் .
அறுவடை:
நட்டு 215 நாட்களில் மகசூலுக்கு வரும் . அடுத்து , ஆண்டுக்கு மூன்று முறை , 3 – 4 மாத இடைவெளியில் மகசூலைப் பெறலாம் . ரோஸ்மேரி பூக்கும் போது இலைகளை அறுவடை செய்ய வேண்டும் . 30-35 செ.மீ. நீளத்தில் , இலையுடன் மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும் . மெல்லிய தண்டு எண்ணெய் எடுக்க ஏற்றது . கடினத் தண்டால் எண்ணெய்யின் தரமும் மணமும் பாதிக்கப்படும் .
பதப்படுத்துதல்:
அறுவடை செய்த இலைகளை நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும் . நீலகிரிப் பகுதியில் 10-15 நாட்கள் வரை உலர்த்த வேண்டும் . சமவெளியில் சிமெண்ட் தரையில் பரப்பி மின்விசிறி மூலம் உலர்த்தினால் இலைகள் சீராகக் காயும் . இதனால் மூன்று நாட்களில் 10% ஈரமுள்ள தரமான இலைகள் கிடைக்கும் . இவற்றைத் தரமான நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கலாம் . இவ்வகையில் , ஒரு எக்டரில் ஆண்டுக்கு 2.5 டன் உலர் இலைகள் கிடைக்கும் .
முனைவர் தே.கெய்சர் லூர்துசாமி ,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன் , முனைவர் மீ.திலக் , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் , உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.