பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்

milk more-milk-production-techniques
Agriwiki.in- Learn Share Collaborate

பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்.

பால்
பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம்.

பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3.5 சதம் கொழுப்பு சத்தும், 8.5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும்.
பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன.

அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும்.
பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பால் கறக்கும் முறைகள்

முழு விரல்களை உபயோகித்தல்:
இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது.

இரு விரல்களை உபயோகித்தல்: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது.
மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது.
பால் கறத்தல்

மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும்.

சுத்தமாக பால் கறக்கும் முறைகள்:
பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு இருந்தால் கீழே ஊற்றி விட வேண்டும்.

பாலில் சேரும் அசுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
கறவை மாடுகளின் மடியிலேயே சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான மாடுகளில் இவ் வகையான கிருமிகள் எவ்விதமான கெடுதலும் செய்வதில்லை. எனவே, பால் கறக்கும்போது முதலில் வரும் பாலை நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காம்பினுள் உள்ள கிருமிகளை நீக்கி விடலாம்.

மாடுகளை அடிக்கடி நன்கு தேய்த்து, கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால், அவற்றை கத்தரித்து நீக்கலாம். கறப்பதற்கு முன் மடி, பக்கத் தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பால் பாத்திரங்களை சுத்தம் செய்தபின், தண்ணீர் அல்லது சுடுதண்ணீராலோ சுத்தம் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் நன்கு உலர்த்திட வேண்டும். ஈரத்தைப் போக்க துணியைக் கொண்டு துடைப்பது நல்லதல்ல. சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், இவை பாலில் ஒவ்வாத வாசனையை ஏற்படுத்திவிடும். பால் கறப்பதற்கும், சேகரிப்பதற்கும் அதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

பாலை பாதுகாத்தல்
பாலை கறந்தவுடன் கொட்டகையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மாட்டுத் தொழுவத்தில் உள்ள நாற்றம் பாலில் சேர்ந்து விடும்.
பாலை கறந்தவுடன் வடிகட்ட வேண்டும். பாலை 5 டிகிரி செல்சியஸூக்கு குளிர்ப்படுத்த வேண்டும். குளிர் சாதனம் இல்லையெனில், குளிர்ந்த நீரில் பாத்திரத்தை வைக்க வேண்டும். பாலை கறந்த 4 மணி நேரத்துக்குள் விற்பனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.