உணவுச் சரித்திரம்

உணவுச் சரித்திரம் food
Agriwiki.in- Learn Share Collaborate
உணவுச் சரித்திரம்…

 

*உணவால்* ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் *உணவுதானே* உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு ஒரு வரலாறு

*உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு.* உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான்.

*ஓர் இடத்தில் குடியேறி நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, விவசாயத்தின் அவசியத்தை புரிந்து கொண்டான்.* வரலாறு முழுக்க நடந்த பல போர்களுக்கும், இடப்பெயர்வுகளுக்கும் *உணவுகள்* ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. உணவின் வரலாறு என்பது உண்மையில் உயிரினங்களின் வரலாறே!

*’உணவு’* என்ற சொல்லின் மீது, பிற மக்களுக்கு இல்லாத கூடுதல் பற்று தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழில் உணவு என்ற சொல்லை *”அறுசுவை உணவு”* என முன்னொட்டு சேர்த்தே பயன்படுத்துவோம். உணவின் வகைகள், சுவைகளின் தன்மைகள், ஆரோக்கியத்தின் அவசியங்கள், மருத்துவ குணங்கள் போன்றவற்றை இந்தச் சொல் குறிக்கிறது.

*உணவு* எனும் சொல் நம் வழக்கத்தில் உடல்நலத்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் சுவாசிப்பதும் உறங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தவிர்க்க முடியாதது உணவருந்துவது. அதனால்தான், நமது முன்னோர்கள் *”உணவே மருந்து; மருந்தே உணவு”* என்று உணவிலேயே உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையைப் போற்றினர். உயிரின் ஊறுபாடு தொடங்குவது உணவின் மாறுபாட்டால்தான். எந்தெந்த உடல் கோளாறுகளுக்கு,என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பதில் தொடங்கி, எந்த வகையான உணவு வகைகள் யார் யாருக்குப் பொருந்தாது என்பது வரை *மிக விரிவான உணவுக் கோட்பாடுகள் தமிழ் மரபில் உள்ளன.*

“அமெரிக்கக்காரன் மின்சாரம் கண்டுபிடிச்சான், சீனாக்காரன் காகிதத்தைக் கண்டுபிடிச்சான்… தமிழன் சாப்பாட்டைக் கண்டுபிடிச்சான்” என வேடிக்கையாகச் சொல்வார்கள். சரி, விஷயத்துக்கு வந்துவிடலாம். உணவைப் பற்றி இவ்வளவு அறிந்த, மூத்தகுடிகளான *நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்?* சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஏதும் அறியாதவர்களாக, *உலகின் ஆகப்பெரிய நோயாளிக்கூட்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.*

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நமது விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனை ஒழுங்குபடுத்தவும் ஆங்கிலேய அரசின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து *அகஸ்டஸ் வால்கர்* என்பவர் அனுப்பப்பட்டார். இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு *“இந்தியர்களிடம் இருந்து நீர் மேலாண்மையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் அவர்களுக்குக் கற்றுத்தர நம்மிடம் எதுவும் இல்லை”* என்றார். ஆனால், நம்முடைய இன்றைய நிலை தலைகீழாக மாறிப்போனது.

உணவு உற்பத்தியில் மட்டும் அல்லாமல், அவற்றைச் சமைப்பது முதல் சாப்பிடுவது வரை அனைத்தும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. விதை நெல்லை எடுத்து, பயிர் விதைக்கும் காலம் போய், விதைத்தன்மையே இல்லாத பயிர் ரகங்கள் வந்துவிட்டன. *ரசாயனக்கலவையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை, கூடுதல் நஞ்சுகளைக் கலந்து பல வடிவங்களில் அடைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.* நாமும் எந்த பிரக்ஞையும் இல்லாமல், அதை வரிசையில் நின்று வாங்கி, உண்கிறோம். *துரித உணவுகள் சமையல் மூலம் கூடுதல் விஷத்தன்மையை* உணவில் ஏற்றிக்கொண்டே *ஆரோக்கிய வாழ்வுக்கு* ஆலோசனை கேட்பவர்களாக மாறி இருக்கிறோம்.

சுழலும் இந்தப் பூமிப்பந்தின் மைய அச்சாகத் திகழ்வது உணவுதான். உணவென்னும் முதுகெலும்பை மனிதர்கள் இழந்துவிட்டால் *உடல் நலம்* எப்படி நிமிர்ந்து நிற்கும்? *லாபம்* என்ற ஒற்றைச் சொல் உலகத்தின் விளை நிலங்களையும் நம் உணவு வகைகளையும் தின்று செரித்துக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்த நவீன உலகில் பின்னோக்கித் திரும்புவது சாத்தியம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால்,மரபுவழி அறிவோடு நவீனத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும்தானே!