Category: Social Media

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

Anand chellaiah

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி.கே.சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு நாட்களாகவே என் மனத்தில் உருண்டுகொண்டிருந்தது. கடந்த மரபுக்கூடல் அன்று நான் எழுதிய‘கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்’ நூல் வெளியானது. சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு, அதில் கையொப்பமிட்டுத் தரச் சொன்னார்கள். ’தமிழே துணை’ என்று எழுதி கையொப்பமிட்டேன். தமிழின் தயவில் எனக்கும் ஓர் அடையாளம் 🙂

‘ஊடகத்துறை வேலையை நம்பிக்கொண்டு காலம் தள்ள முடியாது, என்றைக்கானாலும் சொந்தத் தொழிலே கைகொடுக்கும்‘ என நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தேன். ஒரு தொழில் என் மனத்தில் தோன்றியது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களிடம் அதை பற்றி ஆர்வத்துடன் உரையாடுவேன். பெரியவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவதுதான் அத்தொழில். எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. ஆனால் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் 🙂 இத்தனைக்கும் தமிழ் அடையாளம், தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளனாக அறியப்படுபவனாகவே அப்போது இருந்தேன். வேறொன்றுமில்லை. சமூகத்தில் எதற்குத் தேவை இருக்கிறதோ, அதன் பின்னால் ஓடும் வழக்கமான வணிகப்பார்வைதான் என்னையும் அப்படி திட்டமிட வைத்தது. நல்ல வேளை, திட்டம் கைகூடவில்லை. 🙂

தமிழில் எனக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. தமிழ் அறிவு குறித்த பெருமிதத்தைக் காட்டிலும், அது என் மனத்துக்கு மிக நெருக்கமான பாடம் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் என் பள்ளி ஆசிரியர் கயத்தாறு மீனாட்சி சுந்தரம். தேர்ச்சியைக் காட்டிலும், அந்த உணர்வே என்னைப் பல இடங்களில் வழிந்டத்தியிருக்கிறது. ஆசிரியர் என்ற வகையில் ஒருவருக்கு இதுவே இன்றியமையாத பணி எனக் கருதுகிறேன்.

முதுகலைக் கல்விக்கான பருவத்தில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியைச் சந்திக்க நேர்ந்தது என் வாழ்வில் முக்கியமானதொரு திருப்புமுனை. பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பின்னால் அலைந்த
மாணவர்களில் நானும் ஒருவன். என்னைப் போன்ற சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று உரையாடுவோம். எங்களுக்கு உணவும் கொடுத்து, தமிழ், இலக்கியம், திரைப்படம், வரலாறு எனப் பல தளங்களைச் சார்ந்த செய்திகளையும் அறிமுகப்படுத்துவார். அப்போது அவர் ஒரு விரிவுரையாளர். பணியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். அக்காலத்தில் தான் பெற்ற குறைவான ஊதியத்தில்தான் இதையெல்லாம் செய்தார் என்பதை மிக மிக தாமதமாகவே அறிந்துகொண்டேன். ‘ப்ளேடு உறை மேல ‘Do not wipe out’ன்னு எழுதிருப்பாங்க. துணியை வச்சு துடைச்சாக் கூட, ப்ளேடோட கூர்மை போய்டும். அதைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தி. அதே மாதிரிதான் மொழியும். சொற்களைக் கவனமா கையாளணும். இல்லைனா மொழியின் கூர்மை போய்டும்’ என்று அவர் சொன்னது என் மனதில் நிலைத்திருக்கும் கூற்றுகளில் ஒன்றாகிவிட்டது.

என் மகளுக்கு ஆதிரா என்று பெயரிட்டேன். ரொம்பவும் மெனக்கெடாமல் தமிழ்ப்பெயர் வைத்துவிட்ட பெருமையில் அலைந்த என்னை சலபதியின் குட்டு தட்டி வைத்தது. ‘ஆதிரை எப்படி இருக்கா…மன்னிக்கணும்…ஆதிரா எப்படிருக்கா?’ என்று விளையாட்டாக மின்னஞ்சலில் நலம் விசாரிப்பார். ‘இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைக் கூர்மையா பார்க்கணுமா என்ன?’ என்று நான் அலுத்துக்கொள்வேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம், ‘ஆதிரா வேறு, ஆதிரை வேறு’ என்று எனக்குப் புரிய வைத்தது.

தமிழ்ச்சான்றோர் பலருண்டு. அதை ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர் யாரேனும் இருக்கிறாரா எனில் நண்பர் செந்தமிழனின் பெயரையே சொல்வேன். வேளாண்மை, மருத்துவம், கட்டுமானம், உறவுகள், குடும்பம் என வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்குமான வழிகாட்டல் தமிழில் இருக்கிறது என்பதை என்னைப் போல பலருக்கு உணர்த்திவருபவர். தமிழை உணர்ந்து பயின்றவர்கள்
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்பவர். அவர் சொல்லவில்லை எனில், இந்நூலை நான் எழுதியிருக்க மாட்டேன்.
நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இது சரியானதொரு நூலாக வருவதற்குத் தனது வழிகாட்டலையும் வழங்கினார். அவருடைய மனைவி காந்திமதி மெய்ப்பு பார்த்ததுடன், உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவர்களுக்கெல்லாம் நான் உளமாரக் கூறும் நன்றிகள் நான் தொடர்ந்து செய்ய விரும்பும் நற்பணிகளாக உருமாறட்டும் என இறையை வேண்டுகிறேன். நூல் கூறும் செய்தியை அட்டை வடிவமைப்பில் ஒரு சின்ன விளையாட்டு மூலம் அழுத்தமாகக் கூறிவிடுவது நண்பன் சந்தோஷ் நாராயணனின் பாணி. அதை ‘கஙசஞ’விலும் நிகழ்த்தியுள்ளான். அவனுக்கு நன்றி சொன்னால், ‘லேசா கண்ணு கலங்குற மாதிரி இருக்குது. அழுறியோ?’ என்றெல்லாம் கேட்டு பீதியைக் கிளப்புவான். 🙂 எதுக்கு வம்பு?

தமிழ் இலக்கணத்தை இறுக்கமற்ற தன்மையில், நட்பார்ந்த தொனியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது. செம்மை மரபுப்பள்ளி மூலமாக அது் செயல்வடிவம் பெற்றது. ‘கஙசஞ’ மூலமாக என் விருப்பம் நூல் வடிவம் பெற்றுள்ளது. என் முதல் நூல் தமிழ் இலக்கணத்தை மக்களிடம் பேசும் ஒரு முயற்சியாக இருக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

செம்மை மரபுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்புதோறும் ஒரு தூய தமிழ்ச் சொல்லை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு விளையாட்டை நடத்துவேன். குறிப்புகளின் துணையுடன் புதையலைக் கண்டுபிடிக்கும் வேலைதான் அந்த விளையாட்டின் வடிவம். மரமும் செடி கொடிகளும் நிறைந்த வளாகத்தில் அங்கங்கே குறிப்புகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பு இன்னொன்றுக்கு வழிகாட்டும். இறுதியில் ஒரு புதையலைப் போல ஒரு நல்ல தமிழ்ச்சொல் காகிதத்தில் எழுதப்பட்டு மண்ணுக்கடியில் காத்திருக்கும். ஆழி, கயல், களிறு போன்ற சொற்கள் புதையல் விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கற்பித்தல் பணி குறித்து நிறைவு எனக்கு இல்லை. இத்தகைய சோர்வில் நான் பேச்சற்று இருந்த ஒரு நாள் அது. மீள்பார்வைப் பயிற்சியாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் புதையல் விளையாட்டு மூலமாக அவர்களுக்கு அறிமுகமான சொற்களை நினைவுகூரச் சொன்னேன். ‘டால்பினுக்குத் தமிழில் என்ன பேருன்னு ஞாபகம் இருக்கா?’ என்ற வினாவுக்கு என் முன்னால் நின்று கொண்டிருந்த மாணவர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எங்களுடன் தொடர்பே இன்றி சிலம்பக் கம்புடன் சுற்றிக்கொண்டிருந்த நித்திக்கிடமிருந்து விடை வந்தது, ‘ஓங்கில்!’

நித்திக் ஒரு ‘பால்கனி’ மாணவன். பெரும்பாலும் வகுப்பில் அமர மாட்டான். அருகில் உள்ள வாகை மரத்தின் கிளை மீது அமர்ந்தபடிதான் பாடத்தைக் கவனிப்பான். கோபத்தை அடக்கிக்கொண்டுதான் அவனிடம் உரையாடுவேன். அவன் இச்செய்திகளை நினைவில் வைத்திருப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஒன்றும் நம் கைகள் வெறுமையாக இல்லை; சில பிஞ்சு மனங்களையாவது உள்ளே கொண்டு வந்திருக்கிறோம் என்ற நிறைவு எனக்கு அன்று ஏற்பட்டது. ‘கஙசஞ’ வழியாக அத்தகைய சிறு மாற்றம் நிகழ்ந்தாலும், மகிழ்ச்சி கொள்வேன்

உணவுச் சரித்திரம்

உணவுச் சரித்திரம் food

உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்!

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான்.

Continue reading

நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்

*அறிவியல் அறிவோம்*

*நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்*

முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி வான் லேவென் ஹீக்*- (Antoine Van Leeuwenhoek) என்பவரே.
*இவரது (1632 – 1723) வாழ்க்கை காலம்.*

ஹாலந்து நாட்டை சார்ந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். தந்தையுடன் பள்ளிப்படிப்பும் போய்விட்டது. அப்பொழுது அவருக்கு வயது பதினாறு.வாணிபம் கற்றுக்கொண்டு நகரமன்ற வாயில் காப்பானாகப் பணியாற்றிய இவர் தமது ஓய்வு நேரங்களில் *கண்ணாடி வில்லைகளை இழைத்துச் செப்பமிடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்*. தான் செப்பனிட்ட கண்ணாடி வில்லைகளை இணைத்து நுண்ணுயிர்களை பன்மடங்கு பெரிதாக பார்த்தார். *இதுவே முதல் மைக்ரோஸ்கோப்* ஆகும். இதே போன்று 247 மைக்ராேஸ்கோப்புகளை அமைத்தார். ஒரு பொருளை 40- 270 மடங்கு பெரிதாக்கி காட்டின. இவைகளை மைக்ரோஸ்கோப் என்பதை விட லென்ஸ்கள் என்பதே சரியாகும்.

இவர் தாம் உருவாக்கிய மைக்ரோஸ் கோப்புகளைக் கொண்டு கண்ட கண்ட பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். இதனைக் கண்ட பலரும் பைத்தியகாரன் என்றார்கள். அப்படிக் கூறிய மக்களைப் பார்த்து வேலன் ஹீக் மனம் வருந்தி அறியாமையால் உள்ள அவர்களை மன்னிப்போம் என்றார்.
ஹீக் தான் எடுத்துக் கொண்ட பொருளை நூற்றுக்கணக்கான முறைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவற்றை பதிவு செய்வது என முடிவுக்கு வந்தார்.

பலமுறை பரிசோதனை செய்து தாம் கண்ட உண்மைகளை தொகுத்து இங்கிலாந்தில் *முதலாம் சார்லஸ் மன்னரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ராயல் சொசைட்டி என்னும் விஞ்ஞான கழகத்திற்கு அனுப்பினார்.* என்னுடைய மைக்ராேஸ்கோப்புகள் மூலம் நான் மயிர்களையும், விதைகளையும், தேனீக்களின் கொடுக்குகளையும், ஈக்களின் மூளையையும் பல நுண்ணுயிர்களையும் உற்றுப்பார்த்து வருகிறேன் சான்றோர்களே எனவும் இதுவரை எந்த மனிதனும் கண்டிராதவைகளை நான் பார்கிறேன் எனவும் எழுதி அனுப்பினார். மேலும் தான் அனுப்பிய கடிதத்தில் தான் பார்த்த பாக்டீரியாக்களையும் வரைந்திருந்தார்.

ஆனாலும் அவரது அறிவுப் பசியால் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். தேங்கி நிற்கும் மழைநீர், பல்லின் அழுக்கு, பலவகை பூச்சிகள், தவளைகளின் குடல் என தனது ஆய்வை மேற்கொண்டார். சுத்தமான மழைநீரில் எத்தகைய உயிரும் இல்லை எனவும் அதனுடன் மிளகுப்பொடியை கலந்து நன்கு உறியதும் காற்றில் நான்கு நாட்கள் வைத்திருந்து நுண்ணுயிர்கள் பெருகுவதையும் கண்டறிந்து மகிழ்ந்தார். உடனே ராயல் சொசைட்டிக்கு ஒரு துளி மிளகு நீரில் பல லட்சம் நுண்ணுயிர்களைக் கண்டேன் என எழுதினார்.
*லேவென் ஹீக் தான் முதன் முதலில் பாக்டீரியாக்களை செயற்கை சூழ் நிலையில் சாேதனைச் சாலையில் வளர்க்கும் முறையை கண்டறிந்தவர். இத்தகைய ஆராய்சியின் விளைவாக இவரை *நுண்ணுயிர் இயலின் தந்தை* என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

இவர் ஒருநாள் சிறிய மீனைப் பிடித்து அதன் வாலின் மீது மைக்ரோஸ்கோப்பை வைத்துப் பார்த்த போது மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களைக் கண்டார். அவைகளின் வழியே குருதி ஓடுவதைக் கண்டார். இதுவே *குருதி சுழற்சி ஓட்டம் பற்றிய அறிவை அறிவியல் அடிப்படையில் விளக்கியது*. மேலும் சூடான காஃபியைக் குடித்த பின் தமது பல்லில் உட்பகுதி அழுக்கை மைக்ராேஸ்கோப் மூலம் ஆராய்ந்தார். வெப்பமே பாக்டீரியாக்களை கொள்கின்றன என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கினார். (நாம் இன்னும் காலையில் தரையை தண்ணிரில் வாசல் தெளித்து பாக்டீரியாக்களை வளர்கிறோம்.)

நுண்ணுயிர் அறிஞர் பலர் இருப்பினும் அனைவருள்ளும் மிகச் சிறப்பான சான்றோர் இவரே ஆவார். இவர் தமது ஆய்வை மிகச் சரியாகச் செய்தவர். ஆனாலும் இவர் ஏனையோருடன் ஒத்துழைக்காததால் லூயி பாஸ்டர் (1822 – 1895) வரும் வரை சுமார் 150 ஆண்டு காலம் வரை நுண்ணுயிர் இயல் வளர்ச்சி அடையவில்லை. ஹீக் தமது கருவிகளை குடும்ப உறுப்பினர்கள் கூடத் தொடாதவாறு பாதுகாத்து வைத்திருந்தார்.

நாம் தற்போது பயன் படுத்தும் எலெக்ட்ரான் மைக்ரோஸ் கோப்பிற்கும் லேவென் ஹீக் மைக்ரோஸ்கோப்பிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. லென்ஸ் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை 2500 – 3000 மடங்கு அதிகப்படுத்திக்காட்டும். ஆனால் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ஒரு பொருளை ) 200000 மடங்கு பெரிதாக்கிக் காட்டும். இத்தகைய மைக்ரோஸ்கோப்புகள் கண்டுபிடித்ததன் விளைவாகத் தான் அம்மை போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டன. அதுவரை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை பற்றி அறியாத நாம் நம்மூரில் அம்மை நோய்க்கு மாரியம்மனுக்கு படையல் மற்றும் வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி அபிசேகம் செய்து வந்தோம் என்பதே உண்மை.

எது எப்படியாகினும் லேவென் ஹீக் கண்டறிந்த மைக்ரோஸகோப் தான் நுண்ணுயிர் கண்டுபிடிப்பதில் முன்னோடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தனது தந்தையை இளம் வயதில் இழந்தாலும் சோர்ந்து போகாமல் தனது தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சியாலும் பகுத்தறிவாலும் முன்னேறி *மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடுத்த லேவென் ஹீக்கை நாம் கொண்டாடுவதோடு நமது முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கையூட்டிக்கொள்ள இவர் போன்றே சிந்திப்போம்.*

தகவல்…வளர்ந்தது விஞ்ஞானம், வீழ்ந்தது மூட நம்பிக்கை எனும் நூலிலிருந்து….

க.வி.நல்லசிவன்
திருப்பூர் இயற்கை கழகம்.

விரலை வெட்ட வேண்டாம்

விரலை வெட்ட வேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்க்கு கண்கண்ட மருந்து .

ஆவாரம் இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இது எனது தாயாருக்கு
என்கையாலே செய்து,
அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

நன்றி : Parimala Devi
Dr Kala GH, Sengottai

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்!

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் – கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், குஞ்சுகள் இருமடங்காக வளர்ச்சியடையும்

நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் :

1. ஒரு பழைய பானை

2. கிழிந்த கோணி/சாக்கு

3. காய்ந்த சாணம்

4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்

கரையான் உற்பத்தி செய்முறை :

பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

கரையான் செயலாற்றும் முறை :

இது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

கரையானில் உள்ள சத்துக்கள்:

கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கரையான் கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாகும்.

நன்மைகள் :

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை.

‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

aiims-patna

‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்!
எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

ப.கலாநிதி

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரும் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவற்றில் காஞ்சிபுரம், ஈரோடு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மீதமுள்ள இடங்களில், ‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்; இல்லாவிட்டால் பதவி விலகுவோம்’ என்று மதுரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவும் இப்படி அறிவிக்காத ‘மாண்புமிகு’க்கள், எய்ம்ஸ் மருத்துவமனை என்கிற ‘உன்னத’ கோரிக்கைக்காக இப்படி அறிவித்துள்ளனர்.

செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று செங்கிப்பட்டியில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். காவிரி, கச்சத்தீவு என எந்தவொரு வாழ்வாதாரப் பிரச்னையிலும் சட்டமன்றத்தில் ஓரணியில் நிற்காத திமுகவும், அதிமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, செங்கிப்பட்டியில் கைகோர்த்து நின்றார்கள்.

புதுக்கோட்டையில் தான் அமைய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தையும், அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் போது எனக்கு வியப்பு மேலிடுகிறது. ‘எங்கள் ஊரில் கண்டிப்பாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் ‘என்று யாராவது போராடினால், அந்த ஊரில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று பொருள் கொள்ளலாம். அதேபோல, ‘எங்கள் ஊரில் மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்று போராடுவதாக இருந்தால், அந்த ஊரில் நோயாளிகளின் எண்ணிக்கையும், திடீரென இறப்பு விகிதமும் அதிகரித்திருக்க வேண்டும். மேற்கண்ட ஊர்களில் அப்படி ஏதும், நடந்து விட்டதாக ஒரு தகவலும் இல்லை.

இப்போது, என்னிடம் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. அந்தக் கேள்வியை ‘எய்ம்ஸ்’ காதலர்களை நோக்கிக் கேட்கிறேன். ‘உங்கள் எல்லோருக்கும் நலமான வாழ்க்கை வேண்டுமா, அல்லது மருத்துவமனை வேண்டுமா?’ என்பதே அந்தக் கேள்வி.

‘நலமான வாழ்க்கைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், அதற்கு நூறு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரே ஒரு வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, உங்களுக்கு நலமான வாழ்க்கை வழங்கப்படும் அல்லது கிடைத்துவிடும்.

‘மருத்துவமனைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், பின்வரும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கானவை.

மதுரை மாவட்டத்தில், மதுரை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜாஜி அரசு மருத்துவமனை, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவமனை, உசிலம்பட்டி – மேலூர் – திருமங்கலம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், மதுரையில் குடும்ப நல மருத்துவமனை, 17 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள், திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஓமியோமதி மருத்துவமனை ஆகியவை இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு மருத்துவமனை, புகழ்பெற்ற இராஜா மிராசுதார் மருத்துவமனை, கும்பகோணம் – பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், அதிராமபட்டினம் – பாபநாசம் – திருவிடைமருதூர் – ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் குடும்ப நல மருத்துவமனைகள், 8 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை – அறந்தாங்கி – திருமயம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், வளையபட்டியில் குடும்ப நல மருத்துவமனை, 2 தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 11 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 22 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

இத்தனை மருத்துவ வசதிகளாலும் கிடைக்காத உடல் நலமும், நோய்களுக்கான தீர்வும்தான் எய்ம்ஸ் மருத்துவமனையால் கிடைத்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்கள். மருத்துவமனைகளால் நோய்களைத் தீர்த்துவிட முடியும் என்றால், புதிய மருத்துவமனைகளுக்கான தேவையே இருக்கக் கூடாது.

உடலைப் புரிந்துகொள்வதும், வாழ்க்கை முறையின் மாற்றத்தைக் கொண்டு வருவதுமே, இப்போதையத் தேவை. அப்படிச் செய்வதன் மூலம் எந்த மருத்துவ முறையையும் கடைப்பிடிக்காமல், மருத்துவமே தேவைப்படாமல் நலமாக வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்துள்ள டெல்லி, புவனேஸ்வர், ஜோத்பூர், பட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், போபால் ஆகிய ஊர்களில் எல்லாம் எல்லா மக்களும் நோய்நொடியின்றி நலமாக வாழ்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஊர்களில் மட்டும் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டதா எனத் தேடிப் பாருங்கள். (எய்ம்ஸ் என்பது அடிப்படையில் மருத்துவக் கல்லூரி. அதனுடன் இணைந்த மருத்துவமனையில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி, சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.)

2012ம் ஆண்டிற்கான மத்திய திட்டக்குழுவின் அறிக்கையின்படி, சுகாதாரத்தில் கேரளா முதல் இடத்திலும், கோவா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் ஆந்திரா எட்டாவது இடத்திலும் உள்ளன. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பீகார் 19ஆவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் 20ஆவது இடத்திலும் தான் இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்க, எதிர்காலத்தில் அமைக்கப்படுவதற்கான வரைவு பட்டியலில் தமிழ்நாடு, கேரளா (கோழிக்கோடு), ஆந்திரா (மங்களகிரி) ஆகிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துவிட்டால், என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துப் பார்த்தேன். கே.புதுப்பட்டி சாலையோ, கந்தர்வகோட்டை சாலையோ, மானாமதுரை சாலையோ தேசிய நெடுஞ்சாலையாக மாறலாம். அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு உயரும், நில வணிகம் செழிக்கும், கடைகள் கட்டலாம், தங்குமிடங்கள் – விடுதிகள் கட்டலாம், வீடுகளின் வாடகையை உயர்த்தி வாடகைக்கு விடலாம், இப்படி இன்னும் எத்தனையோ ‘லாம்கள்’.

ஆனால், பிரம்மாண்டமான கட்டடங்கள், அவற்றின் நிர்வாகத்திற்கான துணைக் கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எனப் பலவிதமான கட்டுமானப் பணிகளுக்கும், அவற்றிற்கு வந்து செல்வோருக்கும், தங்கிச் செல்வோருக்குமான தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படும்? நிலத்தடி நீரில்தானே கைவைப்பீர்கள்?

எங்கள் ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்றுப் போராடுகிறவர்களே, உங்கள் ஊருக்கு அடியில் நிலத்தில் இவற்றுக்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதா? அடுத்த 40, 50 ஆண்டுகளுக்கு உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பற்றாக்குறை ஏற்படாமல் தண்ணீர் கிடைக்குமா? லாரிகளில் கொண்டு வருவோம் என்றாலும், வேறு ஏதோ ஓர் ஊரின் வளத்தைச் சுரண்டுவீர்கள், அப்படித்தானே?

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஓர் இடத்தில் குவியும் குப்பைகளை எங்கு கொட்டுவார்கள்? மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எங்கு கொட்டுவார்கள்? அவற்றிற்கெல்லாம் உங்களது வீட்டு வாசல் புறங்களையும், கொல்லைப் புறங்களையும் தயார் செய்து வைத்துவிட்டீர்களா?

மருத்துவமனை அமைந்தால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வழக்கம்போல கம்யூனிஸ்டுகள் சொல்வார்கள். உங்கள் எல்லோருக்கும் மருத்துவமனையில் ‘டீன்’ வேலையா கொடுக்கப் போகிறார்கள்? உரிய ஏஜென்ஸிகள் மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை நிரப்பிவிட்டு, கடைநிலை ஊழியர்களாகத் தான் உள்ளூர் ஆட்களை ஒப்பந்தத்திற்கு எடுப்பார்கள். ஏற்கனவே விவசாயம் செய்து கொண்டும், ஆடு, மாடுகளை வளர்த்துக் கொண்டும், சுயதொழில் செய்து கொண்டும் யாருக்கும் அடிபணியாமல் தற்சார்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களாக்குவதற்குப் பெயர்தான் வேலைவாய்ப்பா?

வளர்ச்சி, வளர்ச்சி என்று வெறியாட்டம் போட்டது, போதும். அடுத்த தலைமுறைக்கு பசியாற நல்ல உணவில்லை, குடிக்க நல்ல தண்ணீரில்லை, சுவாசிக்க நல்ல காற்று இல்லை. ஒரு பருவத்தில் மழை பொய்த்துவிட்டால், ஓராண்டு காலம் காவிரி ஆறு வற்றிவிட்டால், தாகத்தில் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

அரசுகள், கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என யாரிடமும் இதற்குத் தீர்வு இல்லை. நிலைமை கை மீறிப் போய்விட்டது.

உங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன். வளர்ச்சியைத் தூக்கி வீசிவிட்டு, இயற்கைக்குத் திரும்புங்கள். அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்.