பத்திலைக் கஷாயம்

தேவையான உபகரணங்கள் #

250 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் – 1
கலக்கி விட மூங்கில் குச்சி – 1 (5 அடி நீளம்)
மூடிவைக்க துணி 1 (தேவையான அளவு)


தேவையான பொருட்கள்
தண்ணீர் – 200 லிட்டர்
நாட்டுபசுஞ் சாணம் – 2 கிலோ
நாட்டுபசுங் கோமியம் – 20 லிட்டர்
மஞ்சள் தூள் – 200 கிராம்
இஞ்சி – 500 கிராம்
பால் பெருங்காயம் – 10 கிராம்

முதல் நாள்
இஞ்சியை விழுதாக அரைத்துக்கொண்டு, பால் பெருங்காயத்தை நன்றாக தூள் செய்து கொண்டு, மேற்கண்ட அனைத்து பொருட்களையும் பிளாஸ்டிக் டிரம்மில் சேர்த்தபின், கடிகார சுற்றில் (வலது சுற்று) நன்றாக கரையும்படி கலக்கவும், டிரம்மின் வாய் பகுதியை சணல் சாக்கினால் மூடி கட்டிவைக்கவும், ஒரு இரவில் (12 மணி நேரத்தில்) பொருட்கள் நொதிக்கத் தொடங்கும்.

இரண்டாவது நாள்
இரண்டாவது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கிய பின்னர் கீழ்கண்ட அளவுகளில் புகையிலை, பச்சை மிளகாய், நாட்டு பூண்டு இவற்றை தனித்தனியாக நன்றாக அரைத்து சேர்த்து கடிகார சுற்றில் நன்றாக கரையும்படி கலக்கவும். (புகையிலைத்தூள் –1 கிலோ, பச்சை மிளகாய் –1 கிலோ, நாட்டு பூண்டு –500 கிராம்)

மூன்றாவது நாள்
மூன்றாது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் மீண்டும் நன்றாக கலக்கியபின் இலைகளைச் சேர்க்க வேண்டும். ஆடு தின்னாத இலைகள், கசப்புச் சுவையுள்ள இலைகள், வாசனை வரக்கூடிய இலைகள், நாற்றம் அடிக்கக்கூடிய இலைகள், பால் வரக்கூடிய இலைகள் உகந்தவை. உதாரணமாக கீழ்கண்ட இலைகள் உகந்தவை, இவற்றில் வேம்பு, புங்கன், சீதா, ஆமணக்கு, ஊமத்தை என இந்த ஐந்து இலைகளும் நல்ல பலனை அளிக்கக்கூடியதால் அவற்றை முக்கியமாக சேர்க்க வேண்டும்.

வேப்ப இலை (ஈர்க்குடன்), புங்க இலை, சீதாபழ இலை, ஆமணக்கு இலை, ஊமத்தை, இலை, மாமர இலை, வில்வ இலை, துளுக்கமல்லி (முழு செடியும்), கிருஷ்ண துளசி, கொய்யா இலை, பப்பாளி இலை, மாதுளை இலை, மஞ்சள் இலை, இஞ்சி இலை, காப்பி இலை, ஆடாதொடா இலை, எருக்கு இலை, அரளி இலை, நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை மடல்

மேற்கண்ட இலைகளை வகைக்கு 2 கிலோ எடுத்துக்கொண்டு சிறியதாக நறுக்கியோ அல்லது இடித்தோ டிரம்மில் சேர்த்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கவும். டிரம்மை சணல் சாக்கை கொண்டு மூடி கட்டி வைக்கவும்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் கடிகார சுற்றில் ஒரு நிமிடம் கலக்கி விடவும்.

40 நாட்கள் இதை நொதிக்க விடவும். 40 நாட்களுக்கு பின்பு மெல்லிய துணியை வைத்து கரைசலை இரண்டு முறை நன்றாக வடிகட்டிய பின்பு பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை
டிரம்மின் வாய்ப் பகுதியை துணியால் கட்டி வைக்க வேண்டும். சூரிய ஒளி, மழை நீர் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும். பத்து இலை கஷாயத்திற்கு தேவையான அனைத்து செடிகளையும் நமது நிலத்தின் வேலியை சுற்றி நடவு செய்ய வேண்டும்.


பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 400 மி.லி. கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.


பயன்கள்
அனைத்து வகையான பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தும். பூஞ்சண நோய்களையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும்


பயன்படுத்தும் காலம்
இதை 6 மாதங்கள் வரை நிழலில் வைத்திருந்து பயன்படுத்தலாம்

Powered by BetterDocs

Proudly powered by WordPress