வேப்பங்கொட்டை எனும் அற்புதம்
தற்போது தமிழகம் முழுவதும் கிடைக்கும் பயிர்களுக்கான இயற்கையான நோய் எதிர்ப்புப் பொருள் இந்த வேப்பங்கொட்டை.
குறைந்த உற்பத்தி செலவில் விவசாயம் செய்யவும், உரச்செலவைக் குறைக்கவும்,தீமை செய்யும் பூச்சிகளை அண்ட விடாமல் இருக்கவும்,நமக்கு மனவுளைச்சல் இல்லா விவசாயம் செய்யவும் இந்த வேப்பங்கொட்டை பயன்படுகிறது.
ஒரு எக்கர் வைத்திருப்பவர்கள் 50 கிலோ என்ற அளவில் சேமித்து வைக்கலாம்.
ஓடுடன் கூடிய வேப்பங்கொட்டையை சேமிப்பது நீண்டகாலத்திற்கு நல்லது.
தரைவழி பயன்படுத்தும் போது வேப்பங்கொட்டையை இடித்து நசுக்கி காய்ந்த தொழுவுரத்துடனோ அல்லது நேரடியாகவோ மாதமொருமுறை ஓடுடன் தூவலாம்.
தெளிப்பின் போது ஒரு லிட்டர் நீருக்கு 150கிராம் வேப்பங்கொட்டையை இடித்து 12மணி-24மணிநேரம் ஊரவைத்து பின் வடிகட்டிவிட்டு பின்பு அக்கரைசலுடன் வேப்பெண்ணெய் சோப் எனப்படும் காதி சோப்பினை 10கிராம் அளவில் இட்டு கரைத்து பாலாக்கி பின் 20 நாட்களுக்கொரு
முறை அனைத்து பயிர்களுக்கும் அனைத்து காலங்களிலும் தெளிப்பது சிறப்பானது.
ஒரு விவசாயம் ஆரம்பிக்கும் முன் வேப்பங்கொட்டையை நேரடியாகவோ அல்லது புண்ணாக்காகவோ ஏக்கருக்கு 75-100கிலோ இட்டு உழவோட்டுதல் செய்தால் அது மண்ணில் பாசனத்துடன் மட்கி, அதன் திறன் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நாட்களுக்கு மண்ணில் இறங்கி வேரினை பாதுகாத்து விளைச்சலைக் கூட்டும்.
எனவே அதிக அளவில் வேப்பங்கொட்டையை இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாம்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்