தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை..!!!
விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.
பருவம்:-
இறவைப் பயிராக ஜனவரி – பிப்ரவரி, ஏப்ரல் – மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
ரகங்கள்:-
கோ எஃப், எஸ் 29 & கோ எஃப், எஸ் 31 (மறுதாம்பு சோளம்) ரகம் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.
சாகுபடி குறிப்புகள்:-
தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
நிலம்:-
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும்.
பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
விதையளவு:-
ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
உரநிர்வாகம்:-
அடியுரமாக கனஜீவாமிர்தமும் ஹெக்டேருக்கு 400கிலாவும் மற்றும் மேலுரமாக பாசன நீரில் ஜீவாமிர்தம் மாதம் இருமுறை 200லிட்டர் நீரில் கலந்துவிடவும்.
களை மேலாண்மை:
விதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து ஜீவாமிர்தம் நீரில் தர வேண்டும்.
நீர்ப்பாசனம்:
விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
தீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது.
பசுந்தீவன அறுவடை:
50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம்.
முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம்.
அடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும்.
விதை அறுவடை:
விதைத்த 110 அல்லது 125ஆவது நாளில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்:
ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 192 டன்கள் கிடைக்கும். 6 அல்லது 7 முறை அறுவடை செய்ய வேண்டும்.
விதை மகசூல்:
ஹெக்டேருக்கு 1,000 கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45 முதல் 60 நாளாக உள்ளது. எனவே, அறுவடைக்குப் பிறகு 60 நாள் கழித்து விதைக்க வேண்டும்.
தொகுப்பு : திருப்பூர் மகேஷ்குமார், நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.